உண்மைத்தமிழனுக்கு இன்று கரி நாள்……!!!
இலங்கை எனது தாய்நாடு என்று சொல்லும் தமிழர்களுக்கு மானம் கெட்ட ஈனப்பிறவிகள் தின வாழ்த்துக்கள்…..!!!
மரணம் மலிந்த பூமி ஈழத் தமிழர் தாயக மண். 08 ஆண்டுகளாகியும் இன்னமும் உலகம் சொல்லாமல் மறுக்கும் உண்மையின் சாட்சிகளாய்… இந்த காட்சிகள்.. உலகம் மட்டும் இன்னமும் விழிகளை இறுக்க மூடிக்கொண்டு மன சான்றுகளை இறுக்கப் பூட்டியே வைத்திருக்கின்றன..
மறப்போம் மன்னிப்போமாம்.. சில மேதாவிகள் போதிக்கின்றார்கள்.. எதை மறப்பது.?. இவர்களில் எந்த உறவை மறக்க சொல்கின்றீர்கள்? உங்கள் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, மகன், மகள்.. ஏதேனும் ஒரு உறவின் கிழித்துப் போட்ட உடல் இந்த பிணக் குவியலில் இருந்திருந்தால் மனச் சாட்சியின் ஒற்றை துளி விழிப்போடு இருந்தால் உங்களால் எம்மை மறக்கவும் மன்னிக்கவும் சொல்ல முடியுமா?
மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்! நீதியை வென்றெடுக்கும் வரை தொடரும் எம் போராட்டம். மனச்சான்று உள்ள அனைத்து மாந்தர்களும் போராட வேண்டிய போராட்டம்.
உலகில் எந்த மனிதன் துடித்தாலும் தமிழர்கள் நாம் துடித்து குரல் கொடுக்கின்றோம். ஆனால் தமிழர்கள் நாம் இலட்சம் இலட்சமாக எம் மண்ணில் கொன்று குவிக்கப்பட்ட போது இந்த மனசாட்சிகள் எங்கு போயின? இந்த உலகம் செத்தா போனது? இவர்கள் எல்லோரும் அன்று பேசாமல் போன இனப்படுகொலையை எம் உறவுகளுக்காக நாம் பேசக் கூடாதாம்..எச்சரிக்கின்றார்கள் அச்சுறுத்துகின்றார்கள்.. என்னங்கையா நீதி? என்ன நியாயம்? இந்த உலகில் நீதி இன்னமும் வாழ்கிறது என எவர் சொன்னாலும் முதலில் இவர்களை உங்கள் மனக் கண் முன் நிறுத்துங்கள்..
என் உறவுகளின் நிர்வாணங்களை முன்னிறுத்தி நீதி கேட்கும் அம்மண கோலத்தில் தான் இந்த உலகத்தின் நீதியும் மனசாட்சியும் உள்ளது என்பது கொடும் வலி.!
எங்கள் மண்ணில் நடந்த இனப்படுகொலைக்கு கண்ணீர் சிந்த நினைக்காத உலகே.. உலகில் எந்த மண்ணில் சிறுவர்கள் இறந்தாலும் எமக்கு தான் முதலில் வலிக்கிறது என்பதை நீ அறிவாயா?
குழந்தைகளை பறிகொடுக்கும் வலி என்ன என்பதை தமிழினம் போல் சொல்லக் கூடிய மாந்தர்கள் எவரும் உலகில் இல்லை. இன்றளவும் தாய்மையோடு நெஞ்சம் கனக்க எம் இனம் சுமக்கும் வலியின் உச்சமே பச்சிளம் பாலகரை பலி கொடுத்த கொடுமைகள். அதனால் எம்மை அழிக்க முன்னின்ற தேசங்களில் என்றாலும் அவ்வளவேன் எம்மை இன்றளவும் அழிக்க துடிக்கும் சிங்கள தேசத்தின் குழந்தைகள் என்றாலும் நாம் உருகுகின்றோம்.. .. குழந்தைகள் மண்ணில் பூத்த பூக்கள். அவர்களின் பலி கொடுப்பு என்பதை கொத்து கொத்தாக பலி கொடுத்து பரிதவிக்கும் எம் தமிழினம் எப்பொழுதுமே கண்ணீரோடு வருந்தி நினைவு கூறுகிறது. காரணம்
எங்கள் குழந்தைகள் துடிக்க துடிக்க கதறி கதறியே இறந்த காட்சிகள் இன்னமும் எம் விழிகளை மூட விடாமல் கண்ணுக்குள்ளேயே கண்ணீர் இறைத்தபடி காட்சிகளாக நிறைந்திருக்கின்றன. ..
“நீங்கள் யார்? முன்னாள் புலியா?” உளவு வேறு.. புலிகளாக மட்டுமல்ல எலிகளாக கூட எம் மண்ணில் நின்று போராடாத புலம் பெயர்ந்து வாழும் சாதாரண தமிழச்சி நான்… என்னை உளவு பார்க்கும் நீங்கள் முதலில் எம் மண்ணில் நடந்த இனப்படுகொலைக்கு பின்னால் இன்னமும் மறைக்கப்படும் உண்மைகளை ஆராயலாமே?
சரி உங்களுக்கு பிடித்த மொழியில் சொல்கின்றேன்.
நாங்கள் போராளிகள் தான்.. உலகில் மனிதம் காக்க போராடும் போராளிகள்..
நாங்கள் பயங்கரவாதிகள் தான்.. உலகில் ஒற்றை சொட்டு பயங்கரவாதமும் எஞ்சி இருந்து எங்கள் குழந்தைகள் போல் உலகில் ஒரு குழந்தை இப்படி செத்து விடக் கூடாது என தாய்மையோடு துடிக்கும் பயங்கரவாதிகள்..
அழித்தவனுக்கு மாலை போட்டு அழிக்கப்பட்ட எமக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய உலகே.. உன் வீட்டு குழந்தை இறப்பில் உனக்குள் வலி வரும் ஒற்றை கணத்திலாவது இந்த குழந்தைகள் பலி எடுப்புகளுக்கு துணை நின்றோ அல்லது ஊமையாய் நின்றோ நீயும் காரணமானாய் என சிந்திப்பாயா?
உலகிலேயே முதன்மை பயங்கரவாதி யார் தெரியுமா? தாய்…. ஆமாம்.. தன் குழந்தைகள் துடிக்க காணும் தாய்க்குள் கிளர்ந்தெழும் வீரமும் துடிப்பும் தவிப்பும்… உங்கள் பார்வையில் பயங்கரவாதம் என்றால் நானும் பயங்கரவாதியே.. தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகள் தான்!