தமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று!
இலங்கை தனது 72வது சுதந்திர தினத்தை கோலாகாலமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்று தமிழர்களை கவர்ந்த சுதந்திர தினமாக இல்லாதிருப்பதாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் நினைக்கின்றார்கள்.
இதன்காரணம் யாது?
சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்களடமிருந்து, அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இந் நாட்டில் அணைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தே சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள போராடினார்கள் இந்த விடயத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் இஸ்லாமியர் என்ற பேதங்களை மறந்தவர்கள் சுதந்திரம் பெற்றப்பின் பிரிந்து செயல்படக்காரணம் என்ன?
ஆங்கிலேயரின் கட்டளைகளுக்கு ஏற்று செயல்பட்ட இலங்கையர்கள் சுதந்திரத்திற்குப்பின் முரண்பட்டுக்கொள்ள காரணம் யாது? அதிகாரப்போட்டியாக இருந்தால் பெரும்பான்மை மக்களுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும் ஆனால் சுதந்திரம் பெற்றப்பின்பு பாதிக்கப்பட்டவர்களாக சிறுபான்மை தமிழ் மக்களே இருக்கின்றார்கள்.
வெள்ளையரின் ஆட்சி காலப்பகுதியில்; இந்நாடு பொருளாதாரத்தில் பலம்வாய்ந்ந நாடாகவே இருந்துள்ளது. 1948க்குப்பின் டி.எஸ்.சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டம் செயல்படுத்த அரசாங்கம் வெளிநாட்டில் கடன் பெறவில்லை நாட்டின் பொருளாதார வளத்தைக்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.
இன்றும் வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான தேயிலை பயிர் செய்கை றப்பர் பயிர் செய்கை போன்ற திட்டங்களே அந்நிய செரவாணியை இன்றும் ஈட்டி தருகின்றது. அதே போல் அவர்கள் ஆரம்பித்த புகையிரத சேவைக்கான பாதைகள் பாலங்கள் போன்றவை இன்றும் மிக சிறப்பாகவே இருக்கின்றது. அதனை நம்பியே அரசும் செயல்படுகின்றது;.
அதேபோல் துறைமுகங்கள் அவர்களின் ஆட்சியின்போது சிறப்பாக செயல்பட அமுலாக்கிய விதிமுறைகளிலேயே இன்றும் செயல்படுகின்றது நீதி துறையும் அதே வழியில் இருக்கின்றது இருந்தும் இன்றைய நிலையென்ன ? எந்த திட்டமானாலும் வெளிநாட்டை நம்பியே இருக்கின்றோம். சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொண்டபின் எந்தவகையான வளத்தை நாம் பெற்றோம்?
அண்டைய நாடான இந்தியா சுதந்திரத்திற்காக நடாத்திய போராட்டங்கள் உயிர் தியாகங்களைப்போல் நமது நாடு எதையும் இழக்கவில்லை. ஆனால் இன்று இந்தியாவின் பொருளாதார நிலை எவ்வளவோ அதி உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டது அது மிகப்பெரிய நாடு பல நூற்றுக்கணக்கான மொழிகளைப்பேசும் மக்களை கொண்டுள்ளதோடு பல பிரதேசங்களையும் கொண்ட நாடாகும் இருந்தும் அந்நாட்டில் எந்த கோடியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்தியன் என்ற கோட்பாட்டிலேயே வாழ்கின்றார்கள் ஆனால் நமது நாட்டின் நிலை எப்படி இருக்கின்றது?.
1948ல் சுதந்திரம் 1956ல் எழுத்து கலவரம் அதை தொடர்ந்து மக்களுக்குள் இன பாகுபாடு 1977ல் புதிய அரசியல் அமைப்பு தொடர்ந்து 1983 தமிழ் இன அழிப்பு கலவரம் தொடர்ந்து தமிழ் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டங்கள் இவ்வாறு தொடர்ந்த இன முரண்பாடுகளையே கடந்த 69 வருடங்களாக இந்நாடு எதிர்கொண்டு வருகின்றது.
இதற்கு காரணங்களை கண்டு தீர்வை முன்வைக்கவேண்டிய பொறுப்பை பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வரும் கட்சி அரசுகளே மேற்கொள்ள வேண்டும் அவர்களே இந்நாட்டை ஆளும் சக்தியை கொண்டவர்கள் ஆனால் அவர்கள் அப்படி செய்கின்றார்களா? இனவாதத்தையும் ஊழல்களையும் அடித்தளமாக்கிக்கொண்டு தொடர் ஆட்சி செய்யவே கடந்த காலங்களை பயன்படுத்தினார்கள்.
அதையே தொடர்வதா அல்லது அணைத்து மக்களையும் சகோதரத்துவத்துடன் சமமாக வாழ வழிவகுப்பதா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
சுதந்திரத்திற்குப்பின் நாட்டு மக்கள் பொருளாதாரத்தில் நலிவுற்று அல்லல் படும் நிலையே இன்றைய சுதந்திர தினத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிலும் தங்களின் பரம்பரை காணிகளை நம் நாட்டு இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராடிக்கொண்டு இருப்பதும் இந்த நாட்டிலேயே நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தல் இருந்து வீர வசனங்களை பேசி அப்பாவி இலங்கை மக்களுக்கிடையில் தங்களின் சுய நலத்திற்காக முரண்பாட்டை தோற்றுவிக்காது
அனைவரும் இலங்கையரே அனைவருக்கும் உண்மையான சுதந்திர காற்று வீச அதை அனுபவிக்க சிங்கள தலைமைகள் உறுதி கொள்ள வேண்டும் அதன் மூலமே அடுத்த சுதந்திர தினம் ஜக்கிய இலங்கையர்களாக அனைவரும் கொண்டாடமுடியும்.