1

தாய் முகம் தேடும் கன்றாய்
தாகமாய் உள்ளோம்

அற்றைத் திங்கள் நீதான்!
அவ்வெண் நிலவும் நீதான்!
ஒற்றைக் காற்றும் நீதான்!
ஓண்டமிழ்க்குரலும் நீதான்!
கோற்றவைப் பிள்ளை நீதான்!
கொடியர சாள்வாய் நீதான்!
இற்றை வரைக்கும் நீதான்!
இனியும் இனியும் நீதான்!!

நேற்று நீ இருந்தாய் அழகாய்,
நிலவிலும் நீயே வடிவாய்,
ஏற்றுமே துதித்தோம்-உன்னில்,
எத்தனை கனவை நெய்தோம்,
பேற்றிலும் பேறாய் உன்னை,
பெற்றதே தவமாய் கண்டோம்,
போற்றிடும் செல்வப்பேறே,
போன நீ வருவாய் எப்போ?

நீ இருந்து ஆண்ட வன்னி
நீறு பூத்திருக்கே எண்ணி!
பாய் விரித்து உறங்கா வீரம்
பாய்ந்துமே வருமோர் நேரம்!
தாய் முகம் தேடும் கன்றாய்
தாகமாய் உள்ளோம்-இந்தத்
தீயரும் திசை கெட்டோடத்
திரும்பி நீ வருவாய் எப்போ?

பின்னிய வலையை வென்றாய்
பீறிடும் தீயில் நின்றாய்!
இன்நுயிர் சுமந்து சென்றாய்
இறுதியில் நீயே வென்றாய்!
அந்நியர் கண்ணில் மண்ணை
அண்ணா நீ தூவிச் சென்றாய்.
எங்கோ நீ இருப்பாய் இருப்பாய்
இருந்து நீ எழுவாய் நெருப்பாய்

நீ இல்லா வாழ்வும் வாழ்வா
நிலவில்லா வானும் வானா
நீ இல்லை என்றால் தமிழன்
நிழலதும் மிஞ்சாதிங்கே.
நீ இல்லாத் தெய்வம்-உன்னால்
நிமிர்ந்தது இவ் வையம் நாளை
நீ வரும் திசையை நோக்கி
நெடுந்தவம் செய்வோம் வாராய்

மலைத்தோள் அழகா வாழ்க!
மறப்புலி தலைவா வாழ்க!
வளைந்திடா வீரம் வாழ்க!
வணங்கிடா ஓர்மம் வாழ்க!
கலைந்திடாக் கனவும் வாழ்க!
கனவது மெய்ப்படவாழ்க!
நிலையென நீயே வாழ்க!
நூறென அகவை காண்க!

ஒன்றென ஆவோம் நாமும்
ஒரு கொடி சேர்வோம் பாரில்
நன்றென நாங்கள் வாழ
நல்லதோர் தலைவன் உள்ளான்.
நின்று வான் முகிலை உரசும்
நிலைமையில் இருந்தோம் நாங்கள்
இன்று இவ் நிலைக்கேன் ஆனோம்
ஒற்றுமை எமக்குள் வேண்டும்

ஆளொரு வழியில் போனால்
ஆவது ஒன்றும் இல்லை
நாளொரு முடிவில் நின்றால்
நாறவே ஓடும் உண்மை
தோளொடு தோளாய் தமிழர்
தோழர்களானால் வெற்றி
ஆளுமோர் காலம் தன்னை
ஆக்கும் எம் தலைவன் வாழ்க!

நீ வாழ்க! வாழ்க! வாழ்க!

(www.eelamalar.com)