எந்தப் பணியிலும் நேர்மை தவறுவதை அல்லது வஞ்சகமான செயற்பாடுகளை தேசியத் தலைவர் அவர்கள் அனுமதிப்பதில்லை…!

இனத்தின் விடுதலை மீது அவர் கொண்ட கொள்கைப்பற்றுறுதியே அவரது அந்த ஆளுமையின் இரகசியம். போராட்டப்போக்குகளிற் கடும் நெருக்கடிகள் காலத்திற்குக்காலம் ஏற்படுவதுண்டு. அப்படியான நெருக்கடிகளிலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவேனும் செய்யப்படும் எந்தப் பணியிலும் நேர்மை தவறுவதை அல்லது வஞ்சகமான செயற்பாடுகளை தலைவர் அவர்கள் அனுமதிப்பதில்லை. மில்லர் கரும்புலியாகக் களம் செல்வதற்கு முந்திய நிலைமை அது.
சிறிய முகாமினைக்கூட இயக்கம் தாக்கியழிக்க ஆரம்பிக்காத 1985 ஆண்டு முற்பகுதியாக இருக்க வேண்டும். அவ்வேளையில் இராணுவ முகாம் ஒன்றைத் தாக்குவதென்பது எமதியக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும். களத்தில் நின்ற பொறுப்பாளர்களால் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. அதாவது, தனியார் வாகனங்கள் சிறு பரிசோதனையுடன் செல்லும் வீதியின் ஓரமாக அமைந்திருந்தது அந்த இராணுவ முகாம். அவ்விராணுவ முகாம் ஊடாக வழமையாகச் சென்றுவரும் பொது ஆள் ஒருவருடைய வாகனமும் பொதுநபரான சாரதியும் வழமையாகச் சோதனை செய்யும் இராணுவத்திற்குப் பழக்கமாய் போய்விட்டதால் சோதனை இல்லாமலே போய்வரக்கூடியதாக அமைந்திருந்தது.
அதனை அவதானித்த எம்மவர்கள் வாகனச் சாரதிக்குத் தெரியாமல் வாகனத்தில் வெடிகுண்டை பொருத்திவிட்டு, ‘வாகனம் இராணுவ முகாமின் மத்தியிற் செல்லும்போது, தூரக்கட்டுப்பாட்டுக்கருவி மூலமாக’ (றிமோட்) குண்டை வெடிக்க வைத்து, முகாமிற்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு, மேலதிக அணியை உள்ளனுப்பி, முகாமைக் கைப்பற்றுவதாகத் திட்டம் அமைந்திருந்தது. திட்டம்பற்றி அறிந்தவுடன் தலைவர் அவர்கள் கடும் சினமுற்று திட்டத்தை நிறுத்திவிட்டார்.
சாரதிக்கே தெரியாமற் குண்டைப் பொருத்தும் யோசனையைக் கடுமையாகக் கண்டித்ததுடன், ‘உங்களுக்குள் ஒரு துணிவுள்ளவன் இருந்தால் தன்னை அழிக்கும் மனநிலையுடன் வெடிகுண்டை எடுத்துச் சென்று வெடிக்க வைக்கலாமே தவிர, இவ்வாறு வஞ்சகம் புரிவது கடும் தவறென்று’ கண்டித்தார். அதன் பின்னர் கொஞ்சக் காலமாக இத்திட்டத்தின் தவறுபற்றி அடிக்கடி பொறுப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லி சுலபமாக வெற்றிகள் பெறுவதற்காக நியாயமில்லாத திட்டங்கள் வகுக்கக்கூடாதென கருத்தேற்றம் செய்தவண்ணமே இருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்
ச.பொட்டு (2004)