ஆரோகரா கோஷம் வானைப் பிளக்க மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்றம்
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு – அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது. இராம பிரான் மற்றும் இராவணண் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் இவ் ஆலயம் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ளது. இலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் ஆலயமாக பிரசித்திபெற்றுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு – கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூஜை மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து கொடிச்சீலை உள் வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்த்தடியில் விசேட பூஜைகள் நடைபெற்றதோடு, வேத, நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப் பிளக்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித் தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டன. பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெறவுள்ளது. இந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 14ம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறும். உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை தலைவர் தெரிவித்தார்.